கோமாரி நோய் வராமல் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்

 கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயானது வாய்சப்பை, கால் சப்பை, வாய் காணை, கால்காணை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.


 இந்த நோயானது பெரும்பாலும் மழைக்காலங்களில் கால்நடைகளை தாக்குகிறது. இந்த நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும். ஒரு முறை போடப்படும் தடுப்பூசி மூலம் 4 மாத காலத்திற்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு திறனை கூட்டலாம்.
  பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போடாத கால்நடைகளில் நோய் எதிர்ப்பு திறன் குறையும்போது இந்த நோய் ஏற்படுவதை தடுக்க இயலாது. இதுபோன்ற நோய் ஏற்பட்ட மாடுகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமாக நோய் பாதிப்பை குறைக்கலாம். 

வாய் மற்றும் நாக்கில் புண் இருப்பதால் பசுந்தீவனம், உலர் தீவனங்களை உட்கொள்ள இயலாது. ஆகையால் கஞ்சி காய்ச்சி ஆற வைத்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். இயற்கை வழி சிகிச்சை முறைகளையும மேற்கொள்ளலாம். 
சீரகம், வெந்தயம் மற்றும் மிளகு போன்றவற்றை தலா 20 கிராம் எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். பின்னர் இதனுடன் 20 கிராம் மஞ்சள், பூண்டு நான்குபல், 100 கிராம் வெல்லம் போன்றவற்றை சேர்த்து பசைபோல தயார் செய்ய வேண்டும். இறுதியாக முழு தேங்காயில் இருந்து பெறப்பட்ட தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். இதனை சரிபாதியாக காலை, மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். கலவை கொடுத்த பிறகு இறுதியாக 50 கிராம் அளவிற்கு வெண்ணெய், நெய் சேர்த்து வாய்ப்புண்ணின் மேல் தடவினால் சீக்கிரம் ஆறிவிடும். இதனை குறைந்தது 4, 5 நாட்கள் வரை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

கால் குளம்புகளில் உள்ள புண் மற்றும் மடிக்காம்புகளில் உள்ள புண்ணிற்கு பூண்டு 10 பல், மஞ்சள் 10 கிராம், துளசி, குப்பைமேனி, மருதாணி, வேப்பிலை தலா 10 இலைகள் போன்றவற்றை நன்கு அரைத்து அதனுடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து 10 நிமிடம் வரை சூடுபடுத்தி பின்னர் ஆறவைக்க வேண்டும்.

 இதனை கால்குளம்பு, மடிக்காம்பு மீது தடவி விட வேண்டும். மேலும் கால்நடைகளை பொதுவான மேய்ச்சல் நிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது. மாடுகளை வாங்குதோ, விற்பதோ கூடாது.

 கால்நடைகள் உள்ள கொட்டகையின் தரைப்பகுதியை நன்கு சுத்தம் செய்து அதன் மேல் சுண்ணாம்பு தூள் அல்லது பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக கிருமிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கால்நடைகளை நோயில் இருந்து காப்பாற்றலாம் என்று தெரிவித்துள்ளனர்.

tks Fb,DK

Comments