மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு – விளக்கம்
குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பெய்யும் மழைநீரை, குடிநீரின் அவசியத்தை உணர்ந்து, நேரடியாக சேகரிப்பதும், பூமிக்குள் செலுத்துவதுமே மழைநீர் சேகரிப்பாகும்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம்:
  1. தண்ணீர் பற்றாக்குறையை தவிர்த்திட.
  2. நீர் வளத்தை அதிகரித்திட.
  3. நிலத்தடி நீர் மட்டம் குறைவதைத் தடுத்திட.
  4. நீரின் தரத்தை அதிகரித்திட.
  5. கடலோரப்பகுதிகளில் கடல்நீர் ஊடுவருவலைத் தவிர்த்திட.
  6. வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்திட.
  7. களிமண் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் உருவாகும் விரிசல்களைத் தவிர்த்திட.
மழைநீர் சேகரிப்பு – வழிமுறைகள் :
  1. நேரடியாக பாத்திரங்கள், தொட்டிகளில் சேர்த்து வைத்து தேவைக்கு ஏற்ப உபயோகித்தல்.
  2. மழைநீரை பூமிக்குள் செலுத்தி நீர் வளத்தை அதிகரித்தல்.

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள் :
  1. கூரைகளின் மேல் கோணி, உபயோகித்த சாக்கு, பாலிதீன் விரிப்பு ஆகியவற்றையும் பயன்படுத்தி மழை நீரை சேகரிக்கலாம்.
  2. கூரை, ஓடு மற்றும் மொட்டை மாடியிலிருந்து வரும் மழைநீரை, வடிகுழாய் வழியாக வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அல்லது கிணறு ஆகியவற்றில் ஒரு இணைப்புக் குழாய் மூலமாக கொண்டு சென்று சேகரித்தல்.
  3. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீரை, கீழ் நிலைத் தொட்டி, உபயோகத்தில் உள்ள கிணறு மற்றும் கசிவு நீர்க் குழிகள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் சேகரித்தல்.
  4. மேலும், நுழைவு வாயில் வழியாக வழிந்தோடும் மழைநீரை, வடிகால் போன்ற அமைப்பு ஏற்படுத்தி, அதனை நீர்ச் சேமிப்பு கிணற்றில் இணைப்பதன் மூலம் நிலத்தடி நீரை உயரச் செய்யலாம்.
குளம், ஏரி, ஊரணிகளில் மழைநீர் சேகரிப்பு :
  1. கரையைப் பலப்படுத்துதல்.
  2. தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகப்படுத்துதல்.
  3. நீர் வரத்துக் கால்வாய்கள் மற்றும் நீர்வழிகளை சுத்தப்படுத்துதல்.
  4. குடிநீர் எடுக்க வசதியாக கிணறு அமைத்தல்.
தடுப்பு அணை அமைத்து நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தல் :
  1. சரியான இடத்தை தேர்வு செய்தல்.
  2. பெரிய/ சிறிய ஆறுகளுக்குக் குறுக்கே தடுப்பு அணை அமைத்தல்.
  3. நீரின் வேகம் மிகச் சீரான அளவில் உள்ள இடமாகத் தேர்ந்தெடுத்தல்.
  4. கரைகளை இருபுறமும் பலப்படுத்துதல்.
  5. தடுப்பு அணையை கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு அமைத்தல்.
மரங்களை சுற்றி சிறு குழிகள் அமைத்து மழைநீர் சேகரித்தல்:
  1. மழைநீரை சேகரிக்க உதவியாக, மரத்தைச் சுற்றி சாய்வாக சிறிய தடுப்பு அமைத்தல்.
  2. மண் கரை அமைப்பதன் மூலம் நீர் வீணாவதைத் தடுத்தல்.
  3. மரத்தைச் சுற்றி சிறு குழிகள் அமைத்து நீர் ஊற்றுக்கு உதவுதல்.
துளையுடன் கூடிய கசிவு நீர்க் குழிகள் முறை (களி மண் பகுதிக்கு):
  1. களிமண் பகுதியாக இருந்தால் கசிவு நீர்க் குழியின் நடுவில் ஒரு குழாய்க் கிணற்றை அமைக்க வேண்டும்.
  2. கருங்கற்கள் / கூழாங்கற்கள் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
  3. இம்முறை களிமண் பாங்கான நிலப்பகுதிக்கு ஏற்றதாகும்.
மழை நீர் சேகரிப்பின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:
  1. மழைநீர் சேகரிக்கும் இடம் சுத்தமாக இருப்பது நல்லது.
  2. மழைநீர் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்திய பிறகு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
  3. முதலில் கிடைக்கும் மழைநீரை சேகரிக்காமல், சிறிது நேரம் வெளியில் ஒடவிட்டு, சுத்தமான நீர் கிடைக்கும் போது மட்டுமே பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.
  4. மழைநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
  5. சேகரிக்கும் தொட்டியிலிருந்து வெளியேறும் உபரி நீரை உறிஞ்சுக் குழிகள் அமைத்து பூமிக்குள் செலுத்தலாம்.
  6. மழைநீர் சேகரிக்கப் பயன்படும் பாத்திரங்கள், தொட்டிகள் போன்றவை, அவ்வவ்போது சுத்தமாக்கப்படுவதுடன் மூடி வைக்கப்பட வேண்டும்.
  7. சேமிக்கப்படும் மழைநீரில் பாசிபடிதல் மற்றும் பூச்சிகள் சேர்வதைத் தவிர்க்க 1000 லிட்டருக்கு 2 கிராம் வீதம் பிளிச்சிங் பவுடர் கலக்க வேண்டும்.
  8. சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வரும் கழிவு நீரல்லாத நீரை, செடிகளுக்குப் பாய்ச்சுவதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.
தகவல் மகளிர் திட்ட பயிற்றுநர் கையேடு,  (சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயிற்சி)
தகவல் அனுப்பியவர் : பி தமிழ் இலக்கியா, ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  திருவையாறு

Comments