மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை!

"மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்,'' என்கிறார், வாசுதேவன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தேவி நாயக்கன்பட்டியில் உள்ள "அருவங்காடு' தோட்டத்திற்கு சொந்தக்காரரான வாசுதேவன், கவிதா தம்பதியினர் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

பத்து ஏக்கரில் 500 மாமரம், 16 ஏக்கரில் ஆயிரம் தென்னை மரங்கள் வைத்திருக்கிறோம். தென்னைக்கு 20 வயது, மாவிற்கு 15 வயது . 27 அடி இடைவெளியில் தென்னை நட்டோம். ஆண்டுக்கு இரண்டு முறை தொழு உரம், கொழிஞ்சியை இடுவோம். இப்போ ஆட்டுப் புழுக்கை, கொழிஞ்சியா மாத்திட்டோம். வேற ரசாயன உரம் தர்றதில்ல. தேங்காயா விக்காம, கொப்பரையாக்கி, வெள்ளகோவில்ல இருக்குற எண்ணெய் மில்லுக்கு நேரடியா அனுப்பிடுவேன். அன்றைக்கு மார்க்கெட் ரேட்டுக்கு ஏத்தமாதிரி பணம் கிடைக்கும்.
தென்னையில ஆண்டுக்கு ஆறுதரம் காய் பறிக்கலாம். ஆயிரம் மரத்துல, ஒவ்வொரு தரமும் 30ஆயிரம் காய் கிடைக்கும். உரிச்சு உடைச்சு காயவச்சு பருப்பு எடுத்தா 18 டன் கொப்பரை, 18 டன் சிரட்டை கிடைக்கும். ஒரு டன் சிரட்டை 8ஆயிரம் ரூபாய். தேங்காய் மட்டை ஒரு லாரி லோடு 4000 ரூபாய். இந்த வருமானத்தை வைச்சே, தேங்காய் வெட்டுக் கூலி, உரிப்பு கூலி, பருப்பு எடுக்கற கூலியை கொடுத்துடுவேன். கொப்பரையில கிடைக்குறது அப்படியே லாபமாயிடும். ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். 
25 அடிஇடைவெளியில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, கல்லாமை, செந்தூரம், கருங்குரங்கு மாமரங்கள் நட்டிருக்கேன். இதுக்கும் ஆண்டுக்கு ரெண்டு தரம் இயற்கை உரம் கொடுப்பேன். இதுல கிடைக்கிற பழங்களை, நேரடியாக பழமுதிர்ச் சோலை நிலையக் கடைகளுக்கு அனுப்புவேன். மா, தென்னையில கிடைக்கற பொருட்களை நேரடியாக அந்தந்த இடங்களுக்கு அனுப்புறதால, போக்குவரத்து செலவு மட்டும்தான், எனக்கு. மத்தபடி மார்க்கெட் கமிஷன், புரோக்கர் கமிஷன் எதுவும் இல்ல. இதனால மார்க்கெட் விலை கிடைச்சாலே, எனக்குப் பெரிய லாபம் தான்.
மா, தென்னைக்கு ஆட்டுப் புழுக்கை வெளியில விலைக்கு வாங்கி, போட்டிட்டு இருந்தேன். எங்க தாத்தா காலத்தில் நூத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறியாடு இருந்துச்சு. கூலியாட்கள் பற்றாக்குறையால, எல்லாம் போச்சு. ஆட்டுப் புழுக்கைக்காக, கொட்டில் முறை ஆட்டு வளர்ப்பைத் தேர்வு செஞ்சேன். பத்து ஏக்கரில் தென்னைக்கு ஊடே, ஆடுகளுக்குத் தேவையான கோ 3, கோஎப்.எஸ்.29, வேலி மசால், கிளரிசிடியா பசுந்தீவனங்களை பயிரிட்டுள்ளேன். அடர் தீவனத்திற்காக சோளத்தட்டை, மக்காச்சோளமும் சாகுபடி பண்றேன். எல்லாத்தையும் மெஷினில் வெட்டி தீவனமா கொடுக்கறேன். இதனால, ஆட்களோட எண்ணிக்கையும் கம்மி. 
ஆட்டுப் புழுக்கைகள், தென்னை, மாமரத்திற்கு நல்ல உரமாகுது. அதன்மூலம் தீவனப் பயிர்களும் நல்லா வளருது. தீவனத்திற்கு தனியா வெளியில வாங்க வேண்டிய செலவும் இல்ல, என்றார் வாசுதேவன். 
மேலும் தகவல்களுக்கு வாசுதேவன் 94433 29300, லட்சுமணன் 91599 82960.

TKS:DINAMALAR

Comments