கிராம மகளிருக்கு வருவாய் தரக்கூடிய ஒரு எளிய கண்டுபிடிப்பு!


திரு. விவேகானந்தன், கோயமுத்தூர், தனது கண்டுபிடிப்பான அரவை எந்திரத்துடன்.
இப்போது வழக்கத்தில் உள்ள மிளகாய் மற்றும் கொத்தமல்லி அரவை இயந்திரங்களை நிறுவ அதிக முதலீடு தேவைப்படுகிறது. மேலும், அவற்றை இயக்க அதிகமான மின்சாரம் தேவைப்படுவதால், மின் வினியோகம் சீராக இல்லாத கிராமப்புறங்களுக்கு ஏற்றதாகவும் இல்லை.

இதை கருத்தில் கொண்டு, திரு.விவேகானந்தன் (கோயமுத்தூர், தமிழ்நாடு), முதலில் 8 லட்சம் ரூபாய் முதலீட்டில் 3 HP (குதிரை திறன்) கொண்ட மிளகாய் மற்றும் கொத்தமல்லி அரவை இயந்திரத்தை உருவாக்க முயன்றார். இது, வீட்டிலிருந்தபடியே கூடுதல் வருமானம் பெற கிராம மகளிருக்கு உதவும் என்றும் அவர் நம்பினார்.
திரு. விவேகானந்தன் எதிர்நோக்கிய சவால்கள்
இந்த இயந்திரத்தினை வடிவமைத்தவுடன், இது 90 சதவீத அரவை சிக்கல்களை களையும் என்று எண்ணி ஏறக்குறைய 100 எந்திரங்களை தயாரித்து முடித்துவிட்டார். ஆனால் அவரால் 20 இயந்திரங்களை மட்டுமே விற்க முடிந்தது. அவரது இயந்திரத்தை வாங்கி உபயோகப்படுத்திய சிலரும், இயந்திரத்திலுள்ள சல்லடை வழியாக மிளகாய் மற்றும் கொத்தமல்லி செல்லவில்லை என்றும் அரைக்கும்போது அதிகமாக தூசு உருவாகிறது என்றும் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

அதன் பிறகு அரவை இயந்திரம் தயாரிக்கும் வேலை அப்படியே நின்றுவிட்டது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு திரு. விவேகானந்தனால் மீண்டும் வேலையை துவங்க முடியவில்லை. பிறகு விவேகானந்தன், கிராமங்களில் தொழில் முனைவோரை கண்டறிந்து உதவும் ‘வில்குரோ' என்ற நிறுவனம் பற்றி கேள்விப்பட்டார். தனது கண்டுபிடிப்பின் வடிவமைப்பில் உள்ள சிக்கல்களை களைய உதவுமாறு அந்நிறுவனத்தை அணுகினார். வில்குரோவிலுள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள், அரவை இயந்திரத்தை ஆய்வு செய்தபின், முதலில் மூன்று குதிரைத்திறன் கொண்ட மோட்டாருக்குப் பதில் ஒரு முனை மின்சாரத்தில் இயங்கும் ஒரு குதிரைத்திறன் (1 HP) கொண்ட மோட்டாரை பொருத்தச் சொன்னார்கள். ஏனெனில், விவேகானந்தனின் இயந்திரத்தால் தொடக்கத்தில் மூன்று குதிரைத்திறன் வேகத்தில் இயங்க இயலவில்லை. மேலும், மின் வினியோகம் சீராக இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு ஒரு குதிரைத் திறன் கொண்ட இயந்திரமே ஏற்றதாக கருதப்பட்டது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இயந்திரத்தின் சல்லடையில் கொத்தமல்லி மற்றும் மிளகாய் அடைத்துக்கொள்வதற்கு அவற்றிலுள்ள அதிக நார்ச்சத்து காரணமில்லை எனவும் மோட்டாரின் வேகமே காரணம் எனவும் வில்குரோவின் தொழில் நுட்ப ஆலோசகர்கள் கண்டறிந்தனர். இதன் பின்னர், கிராமப்புற உபயோகத்திற்கு ஏற்றவாறு அரவை இயந்திரத்தின் எடை, அதன் பக்கச் சுவர்களின் தடிமன், மோட்டாரின் ஸ்டேட்டார் மற்றும் ரோட்டாரின் விட்டம் ஆகியவற்றை குறைத்து, மாற்றி வடிவமைக்க உதவினர்
அரவை இயந்திரத்தின் விலை
இதன் மூலம், திரு.விவேகானந்தன் கிராமப்புறத் தேவைக்கேற்ப, அதன் உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் வகையைப் மாற்றி, தனது அரவை இயந்திரத்தின் விலையை குறைத்தார். அவரது புதிய அரவை இயந்திரம் (மோட்டாருடன் சேர்த்து) தற்போது ரூ.11,500/-க்கு விற்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் பெற, கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்
திரு.விவேகானந்தன்,
விவேகா இன்ஜினியரின் வொர்க்ஸ்,
புதிய எண்.116-118,
சத்தி ரோடு, ஆர்.கே.புரம்,
கணபதி, கோயம்புத்தூர். 641 006
கைபேசி எண்; 94437-21341
  மூலம் : தி. இந்து நாளேடு

Comments