என்ன தெளிக்கலாம், எப்படி தெளிக்கலாம்?

கடந்த இதழில், 'மண்ணில் 7 அடி ஆழத்தில் தழைச்சத்து, 9 அடியில் பாஸ்பரஸ்...’ என்று வரிசையாக சத்துக்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அது தவறு, 'நிலத்தில் ஆழம் செல்லச் செல்ல மேற்கண்ட சத்துக்களின் அளவு ஒட்டுமொத்தமாகக் கூடிக்கொண்டே இருக்கின்றன' என்பதுதான் சரி.

கடந்த டிசம்பர் 29-ம் தேதி தொடங்கி, ஜனவரி 1-ம் தேதி வரை ஈரோடு நகரில் மகாராஷ்டிராவின் வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 'பசுமை விகடன்' முன்னின்று ஏற்பாடு செய்திருந்த இவ்வகுப்பில் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள் குறித்து கடந்த இரு இதழ்களாக நாம் பார்த்து வருகிறோம்.





ஜீவாமிர்தம் உள்ளிட்ட பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டும் அஸ்திரங்களை பயிர்களுக்குப் பயன்படுத்துவது குறித்து பாலேக்கர் பேசியவை இங்கே இடம்பெறுகின்றன. ஜீவாமிர்தம் உள்ளிட்டவைகளைத் தயாரிப்பது எப்படி என்பது பெட்டிச் செய்திகளாக இடம்பிடிக்கின்றன.


இதோ பாலேக்கர் பேசுகிறார்...


‘‘இங்கே நான் சொல்லும் கணக்குகள் எல்லாமே ஒரு ஏக்கர் அளவில் விதைக்கப்பட்டிருக்கும் பயிர்களுக்கானவை. ஜீவாமிர்தம் தெளிக்கவேண்டிய காலம் மற்றும் அளவுகள் பற்றி இப்போது பார்ப்போம்.


உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, தட்டைப்பயறு, சோயா போன்ற 90 நாட்கள் வயது கொண்ட பயிர்களுக்கு,


முதல் தெளிப்பு, விதைப்புச் செய்த 21-ம் நாள் செய்யவேண்டும். 100 லிட்டர் நீரில், 5 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அடுத்து, 21 நாட்கள் கழித்து இரண்டாவது தெளிப்பு. 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்திலும், மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்கிற விகிதத்திலும் கலந்து தெளிக்கவேண்டும்.


நான்காவது தெளிப்பு, பயிர் பால் பிடிக்கும் தருணத்தில் செய்யப்பட வேண்டும். 200 லிட்டர் நீருடன், பசு அல்லது எருமை மாட்டின் மோர் 5 லிட்டர் கலந்து தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் பயிர்களுக்கு ஊட்டச் சத்துக் கிடைக்கிறது. இதனால் பயிர் வேகமாக வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும்.


நெல், கோதுமை, கேழ்வரகு, காய்கறி என 90 முதல் 120 நாட்கள் வயது கொண்ட பயிர் வகைகள் மற்றும் மலர்ச் செடிகளுக்கு

நடவு செய்த ஒரு மாதத்துக்கு பிறகு, முதல் தெளிப்பு தெளிக்க வேண்டும். 100 லிட்டர் நீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்தடுத்த தெளிப்புகளை 21 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது தெளிப்பு, 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம். மூன்றாவது தெளிப்பு 200 லிட்டர் நீம்அஸ்திரா (இந்தத் தருணத்தில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும். அதைத்தடுக்க நீம்அஸ்திரா மட்டும் தெளிக்கவேண்டும்). நான்காவது தெளிப்பு, 200 லிட்டர் நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

கடைசித் தெளிப்பு, பால் பிடிக்கும் நேரத்தில் 200 லிட்டர் நீருடன் 5 லிட்டர் புளித்த மோர் கலந்து தெளிக்கவேண்டும். மலர்ச் செடிகளைப் பொறுத்தவரை, மொட்டுப் பருவத்தில் இத்தெளிப்பைச் செய்யவேண்டும்.

உளுந்து, சோளம், காய்கறி, கொண்டைக்கடலை, நிலக்கடலை, எள் போன்ற 120 முதல் 150 நாட்கள் வயது கொண்ட பயிர்களுக்கு


விதைப்பு செய்த ஒரு மாதம் கழித்து 100 லிட்டர் நீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவேண்டும். இரண்டாவது தெளிப்பு தொடங்கி, அடுத்தடுத்த தெளிப்புகளை 21 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது தெளிப்பு, 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம். மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீம்அஸ்திரா(இந்தத் தருணத்தில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும். அதைத்தடுக்க நீம்அஸ்திரா மட்டும் தெளிக்கவேண்டும்). நான்காவது தெளிப்பு, 200 லிட்டர் நீர் 20 லிட்டர் ஜீவாமிர்தம். ஐந்தாவது தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 5 லிட்டர் மோர். ஆறாவது தெளிப்பு 200 லிட்டர் நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.


பருத்தி, மிளகாய், துவரை, இஞ்சி, ஆமணக்கு, கொடிபூசணி, அவரை, பாகல் போன்ற 150 முதல் 210 நாட்கள் வயது கொண்ட பயிர் களுக்கு





விதைப்புச் செய்த ஒரு மாதம் கழித்து 100 லிட்டர் நீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டாவது தெளிப்பு, ஒரு மாத இடைவெளியில் 150 லிட்டர் நீருடன், 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவேண்டும். அடுத்தடுத்த தெளிப்புகளை 21 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளவேண்டும். மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீம் அஸ்திரா. நான்காம் தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம். ஐந்தாவது தெளிப்புக்கு 200 லிட்டர் நீருடன் 6 லிட்டர் பிரமாஸ்திரம் (இந்த நேரத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், காயை குடையும் புழுக்கள் போன்றவற்றால் பாதிப்பு வருவதைத் தடுக்கவே பிரமாஸ்திரம்). ஆறாவது தெளிப்புக்கு 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம். ஏழாவது தெளிப்புக்கு 200 லிட்டர் நீருடன் 6 லிட்டர் அக்னி அஸ்திரா (காய்ப்புழு, தண்டு துளைப் பான் போன்ற புழுக்கள் கட்டுப்படும்) என்ற விகிதங்களில் கலந்து தெளிக்க வேண்டும்.


எட்டாவது தெளிப்புக்கு சுக்கு அஸ்திரா (பூஞ்சானக் கொல்லி) 200 லிட்டர் தெளிக் கலாம். ஒன்பதாவது தெளிப்பின்போது பச்சைப் பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை, துவரை பயறு ஆகியவற்றுடன் எள் மற்றும் கேழ்வரகு என ஏழு தானியங்களை அரைத்து மாவாக்கித் தெளிக்கவேண்டும். தானியங்களை தலா 100 கிராம் வீதம் எடுத்து நீரில் ஊற வைத்து, பின்பு பருத்தித் துணியில் கட்டி வைக்கவேண்டும். முளை கட்டியதும் எள் உட்பட எல்லாவற்றையும் அம்மி அல்லது உரலில் போட்டு ஆட்டி மாவாக எடுத்துக் கொள்ளவும். இந்த மாவினை 200 லிட்டர் நீரில் கலந்து, அதனுடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து 24 மணி நேரம் நிழலில் வைத்தி ருக்கவும். பின்பு இதைப் பயிர்களுக்குத் தெளிக் கலாம். இதனுடன் 2 லிட்டர் தேங்காய் (இளநீர் அல்ல) தண்ணீரை கலந்து தெளிப்பது பயிர் வளர்ச்சிக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.







கரும்பு, வாழை... போன்ற ஓராண்டு பயிர் களுக்கு முதல் 5 மாதம் வரை கடலை, நெல் போன்றவற்றுக்கு தெளிப்பது போலவே தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்கலாம்.


6 மற்றும் 8-ம் மாதங்களில் 200 லிட்டர் நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவேண்டும். 9-ம் மாதம் ஏழு வகை தானியங்களை மாவாக்கி (பருத்தி மற்றும் துவரை போன்றவற்றுக்குச் சொல்லப்பட்டது போல) தெளிக்கவேண்டும்.


தென்னை, மா, கொய்யா... போன்ற பல ஆண்டு பயிர்களுக்கும் இதே முறையை பின்பற்றி தெளிக்கலாம்'' என்று விரிவாகச் சொன்ன பாலேக்கர்,


பயிர்கள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் விதை பழுதில்லாமல் இருக்க வேண்டும். தரமான விதை களுக்கான தொழில்நுட்பம், ஒரு பயிர் எந்தளவுக்கு மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றியெல்லாம் பேசினார். அவை...



பிரம்மாஸ்திரா


மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.


அக்னி அஸ்திரம்


புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.


சுக்கு அஸ்திரா


சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.



தயாரிப்பது எப்படி?


பீஜாமிர்தம்


தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.


ஜீவாமிர்தம்


பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.


கனஜீவாமிர்தம்


பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.



நீம் அஸ்திரா!


நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

thanks,Vikadan 

Comments