ஒரு நதியைத் தேடி...!கானல் நீராகும் திட்டம்!

கவுசிகா நதியை அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்று சொல்வதெல்லாம் சரி. அந்த திட்டமே கானல் நீராக இழுக்கும் போது, அதிலே இதை இணைப்பது சாத்தியமா? என்றொரு கேள்வி எழுகிறது. இந்த இடத்தில்...அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக்...
எளிமையாகச் சொல்வதென்றால், பில்லுார் மற்றும் பவானி சாகர் அணை நிரம்பிய பின், காவிரியில் சங்கமித்து, கடலில் கலக்கும் உபரி நீரில் 2 டி.எம்.சி., தண்ணீரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, கால்வாய் மூலமாகத்
திருப்பி, 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தச் செய்வதே இத்திட்டம். ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கு முன்பாக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் வகுக்கப்பட்ட போது, அன்றைய மதிப்பீடு, 310 கோடி ரூபாய். கடந்த 2011-2012 வருடத்திய CWC படிவத்தில், இதன் மதிப்பீடு, 1,862 கோடி

ரூபாய். மத்திய அரசின் வெள்ள நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு, மத்திய நீர் வளக்குழுமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நீர் வள ஆதார அமைப்பு கூறுகிறது. ஆனால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆரம்பகட்ட நிதியாக 25 சதவீதத் தொகையை ஒதுக்கி செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே, மத்திய அரசின் பங்களிப்பு நிதியை ஒதுக்க முடியுமென்று அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழுவிற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.







கடந்த 15 ஆண்டுகளில், பவானி சாகர் அணை 5 முறை நிரம்பி 100 டி.எம்.சி., உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளதாகச் சொல்கின்றனர் விவசாயிகள். ஆனால், இத்திட்டத்திற்கு தேவையான தண்ணீர் 2 டி.எம்.சி., மட்டுமே. அதுவும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பி விட்டால் போதுமானது. அப்படிச் செய்தால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் நிரம்புமென்பது எதிர்பார்ப்பு. இதன் மூலமாக, 30 லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பெறுவர். விவசாயம் செழிக்கும். தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள கால்நடைகள் பெருகும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். 1000- ெமகா வாட் மின்சாரம் சிக்கனப்படும். கிராமப்பொருளாதாரம் உயரும் என்று தீர்க்கமாக நம்புகின்றனர் விவசாயிகள்.

மத்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நீராதாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசு 835 கோடியை வறட்சி நிவாரண நிதியாக விவசாயிகளுக்கு வழங்கியது. எனவே, இத்திட்டம் நிறைவேற வெறும் 200 கோடியை ஒதுக்கி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று, 3 மாவட்ட விவசாயிகள் நீ....ண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும், வாக்குறுதியாக தரப்படும் இத்திட்டம், அதன் பின்பு கிடப்பில் போடப்படுவது வாடிக்கையான வேடிக்கை.எதிர்க்கட்சியினரும் இதற்காக அவ்வப்போது அறிக்கை வெளியிடுவர்; தேர்தல் நேரத்தில், நடைப்பயணம், போராட்டம் அறிவிப்பர். புள்ளி விபரங்களை அள்ளி விடுவர். தேர்தல் முடிந்து விட்டால், கூடாரம் காலியாகி விடும்.
ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, எந்த மக்கள் பிரதிநிதியும் மெனக்கெடுவது இல்லை. அதிகாரிகளும், அதிகமாக அக்கறை காட்டுவதில்லை. விவசாயிகளும் இதற்காக, இதுவரை உக்கிரமான போராட்டம் எதையும் முன்னெடுத்ததில்லை. இந்நிலையில் தான், இந்த திட்டத்தில், கவுசிகா நதியையும் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை, புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு 200 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக செலவாகும்; பலன் பல மடங்கு அதிகம் கிடைக்குமென்று ஆணித்தரமாக வாதிடுகின்றனர் அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகள்.இதை வலியுறுத்தியே, சர்க்கார் சாமக்குளம், இடிகரை, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் மற்றும் 16 கிராம ஊராட்சிகளில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள், பல லட்சம் மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தும் அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமே, காகிதங்களிலேயே கசங்கிக் கொண்டிருக்கும்போது, இந்த திட்டத்தை அதிலே இணைத்து, அரசாணை வெளியிட, தமிழக அரசு முன் வருமா? அப்படி வந்தால் திட்ட வடிவு எப்படியிருக்கும்...?

நடைமுறைச்சிக்கல்...!

அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கவுசிகா நதியைச் சேர்க்க வேண்டுமென்று, இந்த சங்கத்தின் நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கைக்கு பொதுப்பணித்துறையின் திட்டம் (ம) திட்ட வடிவமைப்பு கோட்டம் செயற்பொறியாளர் ராஜகோபால் அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளதாவது: அத்திக்கடவு-அவிநாசி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தில், அக்ரஹார சாமக்குளம், சர்க்கார் சாமக்குளம் ஆகிய குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர், கவுசிகா நதியில் சேர்கிறது. இருப்பினும், இத்திட்டத்தில் உத்தேசித்துள்ள நேர்பாட்டில் சில தொழில் நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், பொதுப்பணித்துறை திட்ட உருவாக்கம் தலைமைப் பொறியாளரின் தள ஆய்வு அறிக்கையில் (தேதி:24-07-2013) குறிப்பிட்டுள்ளவாறு, பழைய நேர்பாடு புதுப்பித்தல் மற்றும் தகுந்த நேர்பாடு குறித்த ஆய்வுப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுபற்றி, தமிழக அரசுக்கு தலைமைப்பொறியாளர் கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு பொதுப்பணித்துறை சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

இத்தனை ஊர்களின் எதிர்பார்ப்பு!

அத்திக்கடவு-கவுசிகா நதி திட்டத்துக்காக, தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பியுள்ள உள்ளாட்சி அமைப்புகள்:

பேரூராட்சிகள்: இடிகரை, சர்க்கார் சாமக்குளம், மோப்பிரிப்பாளையம்.

கிராம ஊராட்சிகள்: அத்திப்பாளையம், கொண்டையம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், தெக்கலுார், செம்மாண்டம்பாளையம், வஞ்சிப்பாளையம், புதுப்பாளையம் மற்றும் கணியாம்பூண்டி.
விளை நிலம் விற்பதைத் தடுக்கலாம்!
மகாலிங்கம், துணைச்செயலர், அத்திக்கடவு- கவுசிகா ேமம்பாட்டுச்சங்கம்-: கவுசிகா நதியின் வழித்தடத்தின் இரு புறமும், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில், நீர்ப்பாசன வசதி இல்லாததால், விவசாயம் நலிந்து, அழிந்து வருகிறது. இங்குள்ள மக்கள், வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கவுசிகா நதியை இணைப்பதன் மூலமாக, ஏராளமான குளம், குட்டைகள் நிரப்பப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்; பாசனக் கிணறுகளில் விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்கும். விவசாயப்பரப்பு அதிகரிக்கும். நிலங்களை லே-அவுட்களுக்கு விற்கும் அவலம் தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1,500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை அமைத்து, பூமியைப் புண்படுத்தும் கொடுமை தடுக்கப்படும். குறைந்த செலவில், அதிக பலன் தரும் திட்டம் என்பதால், மாநில அரசு நிதியிலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசே முன் வர வேண்டும்.




2டி.எம்.சி:
கடலில் கலக்கும் உபரி நீரில் 2 டி.எம்.சி., தண்ணீரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது, கால்வாய் மூலமாகத் திருப்பி, 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தச் செய்வதே இத்திட்டம்.

1862:
கடந்த 2011-2012 வருடத்திய CWC படிவத்தில், இத்திட்டத்தின் மதிப்பீடு, 1,862 கோடி ரூபாய்.
100டி.எம்.சி:
கடந்த 15 ஆண்டுகளில், பவானி சாகர் அணை 5 முறை நிரம்பி 100 டி.எம்.சி உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளதாகச் சொல்கின்றனர் விவசாயிகள்.
500:
இத்திட்டத்தால் 500 குளம், குட்டைகள் நிரம்பும், 30 லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பெறுவர்.

_________________________________________________________________________________


நூறு கோடி ரூபாய்க்கு ஒரு பாலம் கட்டலாம்; ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால், பறக்கும் ரயில் விடலாம்; பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு துணை நகரம் உருவாக்கலாம்; பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நாற்கரச் சாலைகள் அமைக்கலாம்; எத்தனை கோடி ரூபாய் இருந்தால்...ஒரு நதியை உருவாக்க முடியுமென்று கேட்டால், யாரிடம் இருக்கிறது பதில்?

வளர்ச்சி என்ற பெயரில், காடுகளையும், கழனிகளையும்...கூடவே நதிகளையும் நாசப்படுத்தி விட்டோம்; நீர் நிலைகளை நிர்மூலமாக்கி விட்டோம். இன்னும் லேசாய் உயிர்ப்போடு இருக்கிற நதிகளிலும் சாயக்கழிவுகளையும், ஆலைக்கழிவுகளையும், சாக்கடையையும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக சமாதி கட்டிக் கொண்டிருக்கிறோம்.நம்மிடம் இருந்ததையெல்லாம் அழித்து விட்டு, தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு, சதாகாலமும் சட்டச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கே இப்படி என்றால், எதிர்கால சந்ததியின் நிலையை நினைத்தே பார்க்க முடியவில்லை.





இயற்கையின் மிச்சமாய் இருக்கிற நதிகளையாவது காப்பாற்றியே தீர வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. தேசிய நதிகளை இணைப்பது, என்றுமே எட்டாக்கனியாய்த் தெரிகிறது. தமிழகத்துக்குள் பாய்கிற நதிகளையாவது இணைக்கலாம் என்று, அரசுக்கு ஆலோசனை உதித்து, 8 ஆண்டுகள் முடிந்து விட்டன. முதற்கட்டமாக, ஆண்டுதோறும் 13 டி.எம்.சி., நீர் கடலில் கலப்பதைக் குறைக்கும் வகையில், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைக்க, தமிழக அரசு கடந்த 2006ல் முடிவெடுத்து, அதற்கான பணிகளையும் துவக்கியது. ஆனால், 6 கட்டப்பணிகளில் 3 கட்டப்பணிகள் கூட முழுதாக முடியவில்லை. இந்நிலையில் தான், காவிரியின் கிளை ஆறுகளான பவானியையும், நொய்யலையும் இணைக்க வேண்டுமென்ற சங்க நாதம், கொங்கு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தான், இந்த கோரிக்கைக்கான அடிநாதம்.

இதுவரையிலும் எந்த வகையிலும் கவனம் பெறாத கவுசிகா நதியை, இத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலமாக, இவ்விரு நதிகளையும் இணைக்க முடியுமென்பது தான், அரசுக்கு விவசாயிகள் முன் வைத்துள்ள யோசனை. கவுசிகா நதியா...காதிலேயே கேட்டிராத பெயராக இருக்கிறதே... நிஜமாகவே, அப்படி ஒரு நதி இருந்ததா? இன்னும் உயிர்ப்போடு இருக்கிறதா? இந்த கேள்விகளுடன், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டுச் சங்கத்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். அவர்கள் வைத்திருந்த வரைபடத்தை வைத்து, அந்த நதி வழித்தடத்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம். சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், தலைவர் குமாரசாமி, துணைச் செயலாளர் மகாலிங்கம், கோதபாளையம் பாலு உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளும், இந்த பயணத்தில் நம்மோடு இணைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திலுள்ள குருடி மலையில் துவங்கிய நமது பயணம், வாகனம் மற்றும் நடைப் பயணமாக தொடர்ந்து, சுல்தான்பேட்டை அருகில், நொய்யலில் கவுசிகா நதி சங்கமிக்குமிடத்தில் முடிவடைந்தது.

நதிமூலம் எது?
குருடிமலையில், சில ஓடைகள் மற்றும் சிற்றருவிகள் சேர்ந்து, கவுசிகா நதி உற்பத்தியாகிறது. மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து தெற்குப்பாளையம் வழியாகச் சென்று, பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட குருடிமலைப் பகுதிக்குச் சென்றால், இந்த நதியின் மூலத்தைப் பார்க்க முடியும். அங்கிருந்து நூறடி ஆழமுள்ள பள்ளத்தில், பெரிய ஓடையாக மாறும் கவுசிகா நதி, அப்பகுதி மக்களால் குருடி மலையாறு என்றே அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு, அந்த பள்ளத்தில் தண்ணீர் வருமென்பதை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் உறுதி செய்கின்றனர்.

இந்த ஓடைப் பள்ளமானது, தெற்குப்பாளையம் அருகே, மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து, இடிகரை, அத்திப்பாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக, கோவில்பாளையத்தில் சத்தி சாலையையும், பச்சாபாளையம், வாகராயம்பாளையம் வழியாக, தெக்கலூரில் அவிநாசி சாலையையும் கடக்கிறது. பின்பு, புதுப்பாளையம், வஞ்சிப்பாளையத்தைக் கடந்து, சுல்தான்பேட்டை அருகில், நொய்யல் ஆற்றில் சங்கமிக்கிறது.எத்தனையோ நதிகள், நம் வரைபடங்களில் இருக்கின்றன. இந்த நதியும் அப்படித்தானா? இல்லாவிட்டால்...மழைக்காலத்தில், வெள்ளம் பாய்ந்து, இந்த மண்ணிலுள்ள குளங்களையும், மக்களின் மனங்களையும் ஈரப்படுத்துகிற நதியா?

இதுதான் குருடிமலையாறு!
கவுசிகா நதி உற்பத்தியாகும், குருடி மலைக்கு அருகில், தண்ணீர்ப்பந்தல் என்ற இடத்தில் வசித்து வரும் விவசாயி மருதாசலம், 72, கூறுகையில், ''நான் இங்கே தான் 40 ஆண்டுகளாக, விவசாய வேலை செய்து கொண்டிருக்கிறேன். இந்த மலையை குருடி மலை என்பார்கள்; சிலர் குரு ரிஷி மலை என்றும் சொல்வார்கள். அந்த மலையிலுள்ள அருவிகளிலிருந்து பாயும் தண்ணீர் தான், இந்த ஓடையில் பாயும். அதனால் தான், இதை குருடிமலையாறு என்று சொல்லுவோம். மழைக்காலத்தில், நன்றாகவே வெள்ளம் பாய்ந்தோடும். நான் வந்த காலத்தில் இருந்ததை விட, இப்போது இந்த பள்ளம் மேலும் 10 அடிக்கு ஆழமாயிருக்கிறது. இதற்கு கவுசிகா நதி என்றொரு பெயர் இருப்பது பற்றி எனக்குத் தெரியாது,'' என்றார்.

ஒரு ஆறு... பல பேரு!
குருடி மலைக்கு குரு ரிஷி மலை, சிரஞ்சீவி மலை என்றும் பெயர்கள் இருக்கின்றன. தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த மலையைப் பற்றி, வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் சொல்லும் தகவல்கள், ஆச்சரியமூட்டுபவை. இந்த மலைச்சிகரம், குறடு போல முப்பட்டகமாகக் காணப்பட்டதால், குறடு மலை என்று அழைக்கப்பட்டு, குருடி மலை என்று மாறியதாகச் சொல்கிறது இவரது 'பெரியநாயக்கன் பாளையம்- அன்றும் இன்றும்' நூல். இந்த குருடி மலைத்தொடரில், லேம்ப்டன் பீக் (5030 அடி), நாடு கண்டான் போலி (5297 அடி), மேல்முடி (5385 அடி) என 3 சிகரங்கள் உள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழில், குருடி மலை என்ற சொல், இந்த மலையைக் குறிப்பதாகவுள்ளது. துடிசைக் கிழார் எழுதியுள்ள துடிசை (துடியலூர்) புராணத்தில், இந்த மலை 'குருவ விருடி மலை' என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதியின் கரையில், கவுசிக முனிவர் என்பவர் குடில் அமைத்து வாழ்ந்து வந்ததாகவும், அவரது பெயரில் தான் இந்த பெயர் வந்ததாகவும் ஒரு பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.கவுசிகன் என்ற குறுநில மன்னர், இப்பகுதியை ஆண்டு வந்ததால், அவரது பெயரில் இந்த நதி அழைக்கப்படுவதாகவும் இன்னொரு கதையும் கூறப்படுகிறது. மலையோர விவசாயிகளால், குருடிமலையாறு என்றழைக்கப்படும் இந்த நதியை, வழியோர கிராமங்கள் பலவற்றிலும் வண்ணத்தங்கரை ஓடை என்று அழைக்கின்றனர். இதற்கு தன்னாசிப்பள்ளம் என்ற பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில், சந்நியாசி இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்ததால், சந்நியாசிப்பள்ளம் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் தன்னாசிப் பள்ளமாக மாறியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

யாரந்த லேம்ப்டன்?நம்மூர் மலைக்கு ஆங்கிலேயப் பெயரா என்று ஆச்சரியம் எழுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியா முழுவதும் உள்ள இயற்கை அமைப்புகளை அறிவியல் முறையில் (திரிகோணமிதி) அளவிட, அன்றைய ஆட்சியாளர்களுக்கு தூண்டுகோலாக இருந்த வில்லியம் லேம்ப்டன் பெயரை, அக்காலத்திலேயே இந்த சிகரத்துக்கு வைத்து, கவுரவித்துள்ளனர் ஆங்கிலேயர்.

செய்தி.தினமலர்:
நன்றி. எக்ஸ்.செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன்


Comments