நாட்டுக் கோழி வளர்ப்பு

தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.
கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது. அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம்) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.
நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான் செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது. நன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா? முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.
செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இது இலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம் அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக் குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று அடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறு பாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முட வேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு பாதுகாத்து வைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில் முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம் முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும் பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .
நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.
7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.
நன்றி திரு,நாகராஜன்

Comments