சத்தான கால்நடைக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்!

விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு சத்தான தீவனமாகவும், கால்நடை வளர்ப்பில் உப தொழிலாகவும் கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் விளங்குகிறது. எனவே விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லை தீவனமாகக் கொடுத்து சத்துள்ளவையாக மாற்றலாம் என கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு என்பது உழவுத் தொழிலின் உப தொழிலாக உள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளம், கம்பு, மக்காச் சோளத்தின் தட்டை, வேர்க்கடலை கொடி ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகிறது. ஆனால் கால்நடைகளை சத்தானதாகவும், உற்பத்தித் திறன் பெருக்க வேண்டும் என்றால் சத்தான தீவனம் அளிக்க வேண்டும்.
அந்த வகையில் கால்நடைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது கம்பு நேப்பியர் ஒட்டுப் புல், தீவனப் புல் வகையில் குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை கம்பு நேப்பியர் புல்லுக்கு உண்டு. இது கம்பு, நேப்பியர் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்படுவது.

கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லின் சிறப்புகள்: அதிக தூர்கள், சாயத் தன்மையுடன் இருத்தல், மிக மிருதுவான இனிப்பான சாறு நிறைந்த தண்டுகள், அதிக இலை தண்டு விகிதம், பூச்சி, நோய் தாக்குதல் அற்றது. ஆண்டுக்கு ஏழு மறுதாப்பு பயிர் அறுவடைக்கு ஏற்றது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் என்பது கால்நடைகளுக்கு சிறந்த சத்தான தீவனமாகும். இதனை குறைந்த செலவில் உப பயிராக விவசாயிகள் இட்டு பயனடையலாம்.
நல்ல நீர்ப்பாசன வசதி இருந்தால் இப்புல்லை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். நன்கு உழுது தயார் செய்த நிலத்தில் 50 சென்டி மீட்டர் இடைவெளியில் பாத்தி அமைத்து, பார்த்திகளின் சரிவில் 50 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒரு கரணை என நடவு செய்ய வேண்டும். இதுபோல் நடவு செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும்.
வயலில் கரணைகளை நடவு செய்யும் முன் 1 ஹெக்டேருக்கு 110 கிலோ யூரியா, 310 கிலோ சூப்பர், 68 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடி உரமாக இடவேண்டும். இதே அளவு உரங்களை ஆண்டுக்கு ஒருமுறை இட்டு வந்தால் நீண்ட நாள்களுக்கு அதிக மகசூல் பெறலாம் என்றார்.
நன்றி : தினமணி 

Comments