வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!

ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தார்கள். எடுத்தபடி செய்தும் காட்டினார்கள். இன்று அந்தக் கிராமம் செயற்கை உரம் என்கிற அரக்கனிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது.

(செயற்கை) உரத்தை பயன்படுத்தவில்லை எனில் எப்படி பயிர்களைப் பாதுகாப்பார்கள்? இதனால் அவர்களுக்கு நஷ்டம் வராதா என்று நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக ஒரு நயா பைசா நஷ்டம் வராது. காரணம், அவர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் (Integrated Pest Management) கையாள்கிறார்கள். அது என்ன பயிர் பாதுகாப்பு முறை?

சிம்பிள். இயற்கை பல நூறு பூச்சிகளை உருவாக்கி இருக்கிறது. இதில் நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு. கச்சிதமாகக் கணக்கெடுத்தால் கெட்டவை விட நல்லவையே அதிகம். எனவே பயிர்களுக்கு வில்லன்களாக மாறும் கெட்ட பூச்சிகளை அழிக்க நல்ல பூச்சிகளே போதும். தனியாக உரம் ஏதும் பயன்படுத்த வேண்டியதில்லை. இது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை.

இந்த உண்மையைத் தெரிந்த கொண்டதால்தான் நம் முன்னோர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்த செயற்கையான பூச்சி மருந்தையும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்தார்கள்.

இன்று நாம் பூச்சிகளைக் கொல்ல செயற்கை உரத்தை பயன்படுத்துகிறோம். அது கெட்ட பூச்சிகளை அழிப்பதோடு நல்ல பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. இதனால் பயிர்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. செலவுக்குச் செலவு, நஷ்டத்துக்கு நஷ்டம். நம் வயல்களில் செயற்கை உரத்தை பயன்படுத்துவது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

ஈரோட்டு விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.1500 மிச்சப்படுத்தப் போகிறார்களாம்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளும் இந்தப் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை உரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்.

Comments