ஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்,

நம் நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்கின்ற நிலப்பரப்பை சிறு சிறு பகுதிகளாக பிரித்து வரப்புகளை அமைத்து சாகுபடி செய்வதற்கு நிலச்சரிவு தாழ்வாக இருப்பது மிகப்பெரும் காரணியாக விளங்குகிறது. இதற்கு பெரும்பான்மையான நிலப்பகுதிகளை சரிவுகளுக்கு குறுக்கே வரப்புகளை அமைப்பதற்கு பயன்படுத்துவதால் சாகுபடி செய்யும் பரப்பளவுகுறைவாகவே இருக்கின்றது. மேலும் இச்சிறிய வயல் வரப்புகளை சாதாரண முறையில் நிலத்தை சமப்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இச்சாகுபடி முறையில் அதிகமான நீர் விரையம், அதிகமான உரம் மற்றும் சத்துக்கள் வீணாவ தோடு மட்டுமின்றி களைக்கொல்லிகளின் கட்டுப்பாட்டுத்திறன், உரம் மற்றும் நீரின் பயன்பாட்டுத்திறனை வெகுவாக குறைகின்றது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண டிராக்டரால் இயங்கும் ஒளிக்கற்றை கொண்டு நிலத்தைச் சமப்படுத்தும் கருவியை பயன்படுத்துவது அவசியமானதாகும்.
ஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை மிகத்துல்லியமாக சமன்செய்வதுடன் தேவைக்கு அதிகமான வரப்பு மற்றும் வாய்க்கால்களை நீக்கி சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்க செய்கின்றது. இதற்கு சாதாரண முறையில் விவசாயிகள் நிலத் தினை சமன் செய்வதற்கு ஆகும் செலவினைக் காட்டிலும் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக செலவாகும். தோராயமாக ரூ.1500 முதல் 2000 வரை செல வாகும். இதனைக்கொண்டு நிலத்தை சமன்செய்தபிறகு விவசாயிகள் வயலில் அவ்வப்போது செய்யப்படும் சிறிய மாறுதல்கள் மற்றும் சீதோஷ்ண நிலைகள் நிலத்தின் சமப்பரப்பை சிறிதளவு பாதித்தாலும் இவற்றை எளிதாக சரிசெய்துவிட முடியும். எனவே ஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்தி கீழ்க்கண்ட பயன்பாட்டை ஐந்து ஆண்டுகள் வரை பெறலாம்.
* பூஜ்ஜிய சரிவில் நிலத்தை மிகத்துல்லியமாக சமன் செய்வதால் குறைந்த நேரத்தில் வயலுக்கு நீரை கட்டி, நீரை வடித்திட முடியும்.
* ஒரே சீரான அளவில் வயலில் நீரை தேக்கிவைத்து 20-30 சதவீத நீரை மிச்சப்படுத்தி நீர் மற்றும் உரப்பயன்பாட்டுத்திறனை அதிகரித்து அதிக மகசூலை பெற வழிவகை செய்கிறது.
* குறைந்த எரிபொருளைக் கொண்டு (டீசல்) நீர் கட்டுவதால் நீரை இறைக்கும் செலவு குறைகிறது.

* ஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை மிகத்துல்லியமாக குறைந்த நேரத்தில் (ஏக்கருக்கு 2-3 மணி) சமன்செய்வதால் மிகக் குறைந்த நீரைக்கொண்டு சாகுபடி செய்யலாம். மேலும் சேமிக்கப்படும் நீரைக்கொண்டு சாகுபடி செய்யும் பரப்பளவை 2 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.
* பயிர் வளர்ச்சியை மேம்படுத்தி சீரான பயிர் முதிர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
* நீர் பாய்ச்சும் திறனை 50 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்கிறது.
* குறுகிய காலத்தில் அதிக பயிர்களை சாகுபடி செய்து பயிர் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்கிறது.
* களைகளின் தாக்கத்தை வெகுவாக குறைத்து களைக்கொல்லியின் கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்துகிறது.
* களர் மற்றும் உவர் மண்ணின் தன்மையை சீரமைக்க வழிவகை செய்கிறது.
குறைபாடுகள்:
* ஒளிக்கற்றை கொண்டு நிலத்தை சமன்படுத்தும் கருவியின் விலை மிக அதிகம் (ரூ.5 முதல் 7 லட்சங்கள் வரை)
* ஒளிக்கற்றையை சரிசெய்வதற்கும் டிராக்டரில் இணைத்து இயக்குவதற்கும் கைதேர்ந்த நபர்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
* ஒளிக்கற்றை கொண்டு நிலத்தை சமப்படுத்தும் கருவி யின் சமப்படுத்தும் திறன் மிக குறுகிய வயல்களுக்கும் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள வயல்வெளிகளுக்கும் மிக குறைவாகவே இருக்கும்.
பெ.கதிர்வேலன் மற்றும் சி.சுவாமிநாதன்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு.

Comments