விவசாயத்தை கைவிட்ட 8.67 லட்சம் பேர்

தமிழகத்தில் பல பிரச்னைகளால் 10 ஆண்டுகளாக 8.67 லட்சம் பேர், விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக விவசாயம் விளங்கியது. தமிழக விளைபொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நாகரிக வளர்ச்சியில் காவிரி, வைகை போன்றவை முக்கிய பங்காற்றியுள்ளன.


 தென் தமிழகத்திற்கு உணவு வழங்கும் நெற்களஞ்சியமாக தஞ்சை திகழ்ந்தது. ஆனால், இன்று விவசாயத்திற்கு தண்ணீரின்றி நெற் பயிர்கள் கருகும் நிலையுள்ளது. பல விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாக மாறி வருகிறது. பலர் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். 
இதுகுறித்து மத்திய அரசின் நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப்பினர் ஏ.சி.காமராஜ் கூறியதாவது: தஞ்சை, நாகை மாவட்டங்களில் விவசாயம் பொய்த்ததால், விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் தொடர்கிறது. நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். பத்தாண்டுகளில் மட்டும் 8.67 லட்சம் பேர் விவசாயத்தை கை விட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடிப்படை தேவையான தண்ணீரை வழங்கவும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் விவசாயம், மின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற பயன்பாட்டிற்கு நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது தான் இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும், என்றார்.
Advertisement

Comments