இறைச்சிக்குப் புகழ்பெற்ற செம்மறி

தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கீழக்கரிசல் ஆடு, செம்மறி ஆட்டினத்தைச் சேர்ந்தது என்றாலும், இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள செம்மறியாட்டு இனத்தைச் சேர்ந்த எட்டு இனங்களில் மிகவும் புகழ்பெற்றது கீழக்கரிசல் ஆடு. 10 ஆண்களுக்கு முன்புவரை இந்த ஆடுகள் அழிவின் விளிம்பில் இருந்தன. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருக்கின்றன.



இந்த ஆடுகள் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆட்டை அடிக்கருவை, கருவி என்றும் அழைப்பார்கள்.
இந்த ஆட்டுக்குக் கீழக்கரிசல் என்ற பெயர் எப்படி வந்தது? இந்த ஆட்டு உடலின் மேல்பகுதி முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். இதன் காரணமாகவே கீழக்கரிசல் என அழைக்கத் தொடங்கினார்கள்.
கீழக்கரிசல் ஆடுகளில் பெண் ஆடு சராசரியாக 25 முதல் 35 கிலோ எடையும், கிடாக்கள் என்றழைக்கப்படும் ஆண் ஆடு 35 கிலோ எடையுடனும் இருக்கும். கிடாக்களுக்கு 35 செ.மீ. நீளத்தில் கொம்புகள் வளைந்தும் சுருண்டும் காணப்படும்.
இந்த ஆடுகள் கடுமையான வெப்பத்தைக்கூடத் தாங்கி வளரும் திறன் கொண்டவை. இந்த ஆடுகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். மிகவும் கடினமான தீவனத்தை உட்கொண்டால்கூட இந்த ஆட்டுக்கு எளிதில் செரித்துவிடும். இதேபோல மற்ற ஆடுகளைவிட அதிக நேரம் மேயவும் செய்யும். இந்த ஆடுகள் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மேயும் திறன் கொண்டவை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1.73 லட்சம் கீழக்கரிசல் ஆடுகள் இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இவற்றின் எண்ணிக்கை வெறும் 357-க்கு வீழ்ந்தது. தற்போது 3,600 ஆடுகள் இருக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Thanks
TAMIL THE HINDU

Comments