பிரதமர் பயிர் காப்பீடு திட்டம்

'பிரதமர் பசல் பீமா யோஜனா (பி.எம்.எப்.பி.ஒய்.) திட்டம்' மாவட்டம் தோறும் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் மாநில அரசின் மானியத்துடன் காரீப் 2018 - 19 ம் ஆண்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் வேளாண்மையில் நிலையான உற்பத்திக்கு சிறந்த வழிமுறைகளால் விவசாயிகளுக்கு துணை நிற்பதே. இதன்படி இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்தல், நவீன வேளாண்மை தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாயிகளுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிபடுத்தி வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல்.



தகுதி பெறும் விவசாயி

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் திட்டத்தில் கட்டாயம் சேர்த்து கொள்ளப்படுவர். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பை தவிர்த்தல், பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலை, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.


காப்பீட்டுத்தொகை

கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத்தொகை, பிரீமியத்தொகை மற்றும் அதற்கான மானியத்தொகை கிடைக்கும்.

இதன்படி அனைத்து உணவு தானிய பயிர்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றிற்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகை 2 சதவீதம் மட்டுமே.

ஆண்டு வணிக பயிர், தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை 5 சதவீதம். வாழைக்கு 4.3 சதவீதம் செலுத்தினால் போதும்.




விண்ணப்பிக்கும் முறை

முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) வழங்கும் அடங்கல் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

- வேளாண்மைத்துறை, சென்னை.


நன்றி தினமலர்

Comments